Saturday, 26 February 2011

விமானத்தை ஓட்டுவதற்கு பெண் விமானிக்கு எதிர்ப்பு: 1 1/2 மணி தியாலம் தாமதம்


 
டெல்லியில் இருந்து நேற்று காலை 8.10 மணிக்கு மும்பைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது.
பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் சற்று தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 9 மணிக்கு விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. பயணிகள் உள்ளே சென்று தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.
விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானத்தை இயக்கும் விமானியின் பெயர் கூறப்பட்டது. அந்த விமானத்தை ஒரு பெண் விமானி ஓட்டிச் செல்ல இருப்பதாக கூறப்பட்டது. இதை கேட்டதும், பிரமோத் அமோல்கர் என்ற பயணி கூச்சலிடத் தொடங்கி விட்டார்.
அவர் சக பயணிகளிடம், பெண் ஓட்டிச் செல்லும் விமான பயணம் உத்தரவாதமாக இருக்காது. நான் சாக விரும்பவில்லை. இப்போதெல்லாம் பெண்கள் வீட்டையே சரியாக கவனித்து கொள்வதில்லை. விமானத்தை எப்படி ஒழுங்காக ஓட்டுவார்கள் என்றார்.
பிறகு விமானப் பணிப்பெண்களை அழைத்து பெண் விமானி விமானத்தை ஓட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வலுக் கட்டாயமாக விமானத்தில் இருந்து வெளியில் அழைத்து சென்றனர்.இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அவரிடம் சுமார் 40 நிமிடம் சமரசம் செய்தனர்.
கடைசியில் அவரை விட்டு செல்ல நினைத்தனர். இதற்கு மற்ற பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து உயர் அதிகாரி ஒருவர், நான்தான் விமானத்தை ஓட்டப் போகிறேன் என்றார். அதன்பிறகு பிரமோத் விமானத்தில் ஏறினார். மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவத்தால் அந்த விமானம் சுமார் 1 1/2 மணி தியாலம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. விமானம் ஏறும் சமயத்தில் பிரமோத் செல்போனில் தன் மனைவியுடன் பேசியதாகவும், அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் நடந்ததாகவும் தெரிகிறது. மனைவி மீது ஏற்பட்ட வெறுப்பில் பிரமோத் அப்படி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment