Saturday, 26 February 2011

மராட்டியத்தில் இளம்பெண்ணை கற்பழித்த எம்.எல்.ஏ. தப்பி ஓட்டம்: கைது செய்ய மந்திரி உத்தரவு



மராட்டிய மாநிலம் பச்சோரா தொகுதி தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. திலீப்வாக். அவுரங்காபாத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் வேலை தேடி நாசிக் வந்தார்.
அவர் எம்.எல்.ஏ. திலீப்வாக்கை சந்தித்து வேலை கேட்டு விண்ணப்பம் செய்தார். அந்த பெண்ணை எம்.எல்.ஏ.வும் அவரது உதவியாளர் மகேஷ்மாலி என்பவரும் வேலை வாங்கி தருவதாக கூறி நாசிக்கில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து கற்பழித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார்.
இந்த சம்பவம் மராட்டிய மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சர்க்கார் வாடா போலீஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ. திலீப்வாக் மீதும், மகேஷ்மாலி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன் மீதான கற்பழிப்பு புகாரை எம்.எல்.ஏ. மறுத்தார். அரசியல் எதிரிகள் தன்னை பழிவாங்குவதற்காக இந்த பொய் புகாரை கொடுக்கச் சொல்லியுள்ளனர் என்றார்.
எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டதை மராட்டிய உள்துறை மந்திரி ஆர்.ஆர். பட்டீல் உறுதி செய்தார். சட்டத்தின் முன் அனைவரும் சமம். எனவே எம்.எல்.ஏ. மீதான புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ஆர்.ஆர். பட்டீல் கூறினார்.
கற்பழிப்பு வழக்கில் சிக்கிய எம்.எல்.ஏ. திலீப்வாக் தப்பி ஓடிவிட்டார். தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்யவும் உள்துறை மந்திரி ஆர்.ஆர். பட்டீல் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே கற்பழிப்பு புகாரில் சிக்கிய திலீப்வாக் தேசியவாத காங்கிரசில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டு உள்ளார்.
மாநில தலைவர் மதுக்கர் பிச்சாட் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். எம்.எல்.ஏ. மீதான புகார் குறித்து முழு அளவில் விசாரணை நடத்துமாறும் அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment