Sunday, 20 February 2011

உலக கிண்ணம் : இன்று இலங்கை அணியுடன் கனடா மோதல்



இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை, கனடா எதிர் கொள்கிறது.
பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான இலங்கை அணி கத்துக்குட்டி கனடாவை எளிதில் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள அம்பணத்தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மகிந்தா ராஜபக்ஷ மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.
இலங்கை அணியில் நடுவரிசை வீரர் சமர சில்வா இடம் பெறமாட்டார் என்று தெரிகிறது. உறவினரின் திடீர் மரணத்தால் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இன்றைய ஆட்டம் தொடர்பாக இலங்கை அணித் தலைவர் சங்ககாரா கூறியுள்ளது:
முதல் ஆட்டம் மிகவும் முக்கியமானது. இறுதி ஆட்டத்தில் விளையாடும் போது எவ்வளவு முக்கியத்துவம் தருவோமோ அதே போல முதல் ஆட்டத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். கனடா அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவர்கள் 16 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்துள்ளனர்.
ஆட்டம் நடைபெறவுள்ள மைதானம் புதிது. இதுவரை உள்ளூர் ஆட்டங்களே அங்கு நடைபெற்றுள்ளன. எங்கள் வீரர்கள் யாரும் அதில் விளையாடியது இல்லை. எனவே மிகுந்த கவனத்துடனேயே களம் இறங்குவோம் என்றார்.
இரண்டு உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள சங்ககாரா, இப்போது முதல்முறையாக உலகக் கோப்பையில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

No comments:

Post a Comment