Thursday, 17 February 2011

தொலைக்காட்சியில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளுக்கு தடை: சீனா



சீன திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகில் அதிகளவில் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும் நாடு சீனா. இதனால் அங்கு ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறந்து போகின்றனர். அங்கு 30 சதவீத இளைஞர்கள் புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர்.
இதே வேகத்தில் இருந்தால் 2030 களில் ஆண்டுக்கு 35 லட்சம் பேர் பலியாகக் கூடிய சூழல் உருவாகி விடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சீன கம்யூனிஸ்ட் அரசு புகையிலை பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியில் கடந்த 10 ஆண்டுகளாக தீவிரம் காட்டிவருகிறது.
அதன் ஒரு பகுதியாக விளையாட்டு நிகழ்ச்சிகளில் புகையிலை மற்றும் புகைபிடித்தல் தொடர்பான விளம்பரங்களுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேசிய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகையிலை பயன்பாடு மற்றும் புகை பிடித்தல் தொடர்பான காட்சிகளை குறைத்துக் கொள்ளும்படி அவற்றின் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் புகைபிடிப்பது மற்றும் சிகரெட் வாங்குவது, கதாபாத்திரங்கள் பொது இடங்களில் புகைபிடிப்பது போன்ற காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாய்ப்பு உள்ள பட்சத்தில் நடிகர்கள், இயக்குனர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை விட்டுத் தள்ளிச் சென்று புகைபிடிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment