Sunday, 1 May 2011

கர்நாடகாவை கலங்கடித்த கொடூரமான கொலைகாரர்கள் கைது



கர்நாடக மாநிலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்து வீசப்பட்ட 10 பெண்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. .
இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணை செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், மேலும் ஒரு சம்பவமாக, தும்கூர் பகுதியில் உள்ள நல்லாவி பகுதியில் மேலும் ஒரு பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டது.
தும்கூர் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், கொலையான பெண் பெங்களூரு, நாகஷெட்டிஹள்ளியைச் சேர்ந்த லட்சுமி தேவி என்பதும், அவர் ஒரு பாலியல் தொழிலாளி என்பதும் தெரியவந்தது.
பொலிசார் அந்த பெண்ணின் அண்டை வீட்டார், உறவினர்கள் உள்ளிட்டோர் அளித்த தகவலின் பேரில், பிரேமா (42) என்ற பெண்ணையும், அவரது சகோதரி மகன் ராகவேந்திரா (25) என்ற இளைஞரையும் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள சுந்தரேஷ் என்பவரை, பொலிசார் தேடி வருகின்றனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், பணம், மற்றும் நகைக்காக பாலியல் தொழில் செய்யும் பெண்கள் 11 பேரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து 100 கிராம் தங்க நகைகள், ஒரு மாருதி வானை, பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பிரேமா, ராகவேந்திரா, சுந்தரேஷ் ஆகிய மூன்று பேரும், குறுக்கு வழியில், கொள்ளையடித்து பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டனர். அதற்காக, அதிக நகைகள் அணிந்துள்ள பாலியல் தொழில் செய்யும் பெண்களை அவர்கள் குறி வைத்தனர்.
பெரும்பாலும் இத்தகைய பெண்கள் தங்கள் குடும்பங்களை பிரிந்து தனியாகவே வசிப்பர். எனவே, அவர்கள் காணாமல் போனாலும் அவர்களை யாரும் சந்தேகப்பட்டு விசாரிக்க மாட்டார்கள்.
ராகவேந்திராவும், சுந்தரேசும், இத்தகைய பெண்களை கண்டுபிடித்து, அவர்களை பின்தொடர்ந்து கண்காணிப்பர். அவர்களிடம் பணம், நகைகள் அதிகம் இருப்பது உறுதியானது தெரிந்ததும் அந்த பெண்களை பிரேமாவின் வீட்டிற்கு அழைத்து வருவர்.
அவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது போன்று நடித்து மது அல்லது குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுப்பர். அந்த பெண் மயங்கியதும் அவளிடம் இருக்கும் நகைகள், பணம், செல்போன் உள்ளிட்டவற்றை மூன்றுபேரும் எடுத்துக்கொள்வர்.
பின்னர், கழுத்தை கயிற்றால் இறுக்கியோ அல்லது தலையில் தாக்கியோ கொலை செய்வர். பின்னர், அந்த உடலை சாக்கு மூட்டையில் கட்டி நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடங்களில் வீசுவர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி எட்டு மாதங்களில் 11 பாலியல் தொழில் செய்யும் பெண்களை கொலை செய்து, அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர். கொலை செய்யப்பட்ட 11 பெண்களில், 4 பெண்களின் அடையாளம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற பெண்கள் குறித்த விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment