Thursday, 17 February 2011

உலக கிண்ணப் போட்டி: கோலாகல துவக்க விழா

பத்தாவது உலக கிண்ண கிரிக்கெட்டின் துவக்கவிழா இன்று தாகாவில் நடக்கிறது. இரண்டே கால் மணி நேரம் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைய உள்ளது.
இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து பத்தாவது உலக கிண்ணத் தொடரை நடத்துகின்றன. போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் துவங்குகின்றன. இதன் துவக்கவிழா இன்று வங்கதேசத்தின் பங்கபந்து தேசிய விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடக்கிறது.
வங்கதேசம் சுதந்திரம் அடைந்த பின் நடக்கும் மெகா விளையாட்டு தொடர் என்பதால், உலகத்தின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்க இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தீர்மானித்துள்ளது. 135 நிமிடங்கள் நடக்கும் துவக்கவிழா நிகழ்ச்சிகள் இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த விழாவில் பிரபல பாடகர் பிரயான் ஆடம்ஸ், இந்திய பாடகர் சோனு நிகாம் போன்றவர்கள் பங்கேற்கின்றனர்.
அதற்கு முன்பாக மாலை 4 மணிக்கு எட்டு முன்னணி வங்கதேச பாடகர்கள் பங்கேற்கும் 50 நிமிட நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் பிரபல இசைக் கலைஞர்கள் ருனா லைலா, சபீனா யாஷ்மின், கிராமிய பாடகர் மும்தாஜ் பேகம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஷங்கர், ஈசான், லாய் என்ற மூன்று இந்திய இசையமைப்பாளர்கள் இணைந்து பத்தாவது உலக கோப்பை தொடரின் "தீம்" பாடலை இந்தி, இலங்கை, வங்கதேச மொழிகளில் அறிமுகம் செய்கின்றனர். இதற்குப்பின் 14 நாடுகள் பங்கேற்கும் 42 நாட்கள் நடக்கும் கிரிக்கெட் தொடரை வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, முறைப்படி அறிவித்து துவக்கி வைக்கிறார்.
அடுத்து வங்கதேச நிதியமைச்சர் முகித், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆசாத் அலி சர்கார், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சரத் பவார், வங்கதேச கிரிக்கெட் போர்டின் தலைவர் வாழ்த்துரை வழங்குகின்றனர். அடுத்து அலங்கரிக்கப்பட்ட ரிக்ஷாவில் 14 அணியின் கேப்டன்களும், மைதானத்துக்குள் அழைத்து வரப்படுவார்கள். பின் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள வங்கதேசத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் ராட்சத உருவப்படத்தை, பிரதமர் ஷேக் ஹசீனா திறந்து வைக்கிறார்.
இதில் ஒவ்வொரு நாட்டுக்கும் தங்களது கலாசாரம், மரபு வழி ஹீரோக்களை வெளிப்படுத்த குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வங்கதேசத்துக்கு 20 நிமிடம் தரப்பட்டுள்ளது. இதில் 1952 ல் நடந்த மொழி இயக்கம், 1971ல் நடந்த விடுதலைப் போராட்டம் உள்ளிட்ட பல வரலாற்று நிகழ்வுகள் தொகுக்கப்பட்டு நிகழ்ச்சிகளாக நடத்தப்படுகின்றன. இது தவிர இந்தியா, இலங்கைக்கு தலா 12 நிமிடங்கள் தரப்பட்டுள்ளன. அதன் பின் கண்ணைக்கவரும் வகையிலான லேசர் ஷா வாண வேடிக்கைகள் நடக்கும்.
துவக்க விழாவில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த 2500 மாணவர்கள் மற்றும் 3500 ராணுவ வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதை அனைத்தும் பிரபல இந்திய நடனக்கலைஞர் சந்தோஷ் சேட்ஜி தலைமையில் நடக்கிறது. இதை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment