Sunday, 27 March 2011

20 நிறுவனங்களின் லைசென்ஸ் ரத்து: தொலைத்தொடர்பு துறையின் திடீர் நடவடிக்கை


தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட லைசென்ஸ் பெற்று இதுவரை சேவையை துவக்காத 20 நிறுவனங்களுக்கு லைசென்ஸ்களை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப தொலைத்தொடர்பு துறை தீர்மானித்துள்ளது.
இது குறித்து மத்திய தொலைத்தொடர்பு துறையின் செயலர் சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது: தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபடும் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் தனித்தனியாக லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கான சேவை பகுதி "டெலிகாம் மண்டலம்" என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலமும் மாநிலங்களுக்கு இணையாக இருக்கும். லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களது சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்பது நிபந்தனை.
ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் சேவையை விரிவுபடுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தன. இவ்வாறு செயல்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் படியும், அவற்றின் லைசென்சை ரத்து செய்யும் படியும் தொலைத்தொடர்பு ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த மாதம் இரண்டாவது வாரம் எடிசலாட் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு லைசென்சை ரத்து செய்வது தொடர்பாக தொலைத்தொடர்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எடிசலாட் நிறுவனம் மும்பை மற்றும் டில்லி மண்டலங்களிலும், ஐடியா நிறுவனம் பஞ்சாப் மண்டலத்திற்கும் தொலைத்தொடர்பு சேவை துவங்க லைசென்ஸ் பெற்றிருந்தது.
இந்நிலையில் நிபந்தனைப்படி நடக்காத மேலும் 20 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. இவ்வாறு சந்திரசேகர் கூறினார். 

No comments:

Post a Comment