Saturday, 26 March 2011

ரயில் மோதி கர்ப்பிணி சாவு: வயிற்றில் இருந்த சிசு தப்பியது



கோவையில் இன்று ரயில் மோதி நிறை மாத கர்ப்பிணி பலியானார். ரயில் மோதிய வேகத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தர்மபுரி மாவட்டம், அரூர் மாம்பட்டியை சேர்ந்தவர் கோபால். மனைவி குப்பம்மாள்(36). இவர்களுக்கு ராஜதுரை (11), நதியா (7), ரஞ்சனி (5), திருப்பதி (3), தனலட்சுமி (2) ஆகிய 5 குழந்தைகள்.
குப்பம்மாள், நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். கோவை சங்கனூர் ரோடு, பூந்தோட்டம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கணவன், மனைவி கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் சங்கனூர் ரயில்வே கேட் அருகே குப்பம்மாள், காலைக் கடன் கழிக்க தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது, வேகமாக வந்துகொண்டிருந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், அவர் மீது மோதியது.
இதில் அவரது உடல், 500 அடி தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டு சின்னாபின்னமானது. ரயில் மோதிய வேகத்தில் குப்பம்மாளின் வயிற்றில் இருந்த குழந்தை தொப்புள் கொடியுடன் தண்டவாளத்தின் இடையில் விழுந்தது.
அதிகாலை 7 மணி அளவில் அந்த வழியாக ரோந்து சென்ற ரயில்வே ஊழியர்கள், தண்டவாளத்தின் இடையில் பிறந்து சில மணி நேரமே ஆன அழகிய ஆண் குழந்தை கிடப்பதை பார்த்து ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று குழந்தையை மீட்டனர்.
பிறந்ததும் தாயை இழந்த அந்த குழந்தை, அதிர்ஷ்டவசமாக தப்பியது குறித்து பொதுமக்கள் வியந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை நர்ஸ்கள் பராமரித்து வருகின்றனர். ரயில் மோதி பலியான பெண்ணுக்கு, குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment