Thursday, 24 March 2011

மன்னாரில் கடல் நீர் உட்புகுந்துள்ளது! மக்கள் அச்சத்தில்!!

இன்று மன்னார், பேசாலை, நடுக்குடா, தலைமன்னார் மற்றும் பழைய பாலத்தடி ஆகிய பிரதேசங்களில் கடல் நீர் கிராமத்தினுள் உட்புகுந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசக் கடலில் கடல் நீரின் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதுடன் கடுங்காற்றும் வீசி வருகின்றது. இதனால் இன்று கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்பினர்.

கடல் நீரின் மட்டம் அதிகரித்துக் காணப்படும் நேரத்தில் கடுங்காற்றுடன் கடல் நீர் கிராமத்தில் உட்புகுவதனால் கடல் கரையை அண்டிய மக்கள் பீதியுடன் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் கடல் நீர் உட்புகுந்தினால் பழைய பாலத்தடியில் குடும்பத்துடன் வந்து தங்கி மீன்பிடித்தொழில் ஈடுபட்ட நாற்பது தென்னிலங்கை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை, ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வு மற்றும் சுனாமித் தாக்கம், இலங்கையின் மட்டக்களப்பில் நிலத்தடி நீர் வெளியேறியமை, சுப்பர்மூன் நிகழ்வு போன்ற உலகில் இடம்பெறும் இயற்கை மாற்றங்களால் மக்கள் மத்தியில் பீதி நிலை அதிகரித்துக் காண்ப்படுகிறது.

No comments:

Post a Comment