Thursday, 28 April 2011

இந்தியாவுடன் மேம்பட்ட உறவை ஏற்படுத்த வேண்டும்: கனடா



இந்தியாவுடனான ஒருங்கிணைந்த உறவை அனைத்து துறைகளிலும் மேம்படுத்த வேண்டும் என்று கனடாவின் எதிர்க்கட்சியான சுதந்திர கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கனடா-இந்தியா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த வட்ட மேஜை கலந்தாய்வில் இந்த முடிவு வலியுறுத்தப்பட்டது. இந்தியாவுடன் வர்த்தக உறவு மட்டுமின்றி, குடியேற்றம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட துறைகளிலும் உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று சுதந்திர கட்சியின் முன்னணி தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் சுதந்திர கட்சியின் முக்கிய தலைவர்களான பாப் ரே, ஜான் மெக்கலம், மரியா மின்னா, ராப் ஓலிபன்ட், ராணா சர்க்கார் ஆகியோர் பங்கேற்றனர். இந்தியா-கனடா இடையிலான உறவு மேலும் வலுவடைந்து வருவதற்கு கனிஷ்கா விமான விபத்தில் கனடா காட்டி வரும் ஒத்துழைப்பே காரணம் என பாப் ரே சுட்டிக்காட்டினார்.
முந்தைய சுதந்திர கட்சி ஆட்சியிலிருந்த போது ஜி8 அமைப்பிலிருந்து முன்னேறி ஜி20 நாடுகள் பட்டியலில் கனடா சேர வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. இந்த அமைப்பில் வளரும் நாடுகளான இந்தியாவும் இடம்பெற்றுள்ளதை ரே சுட்டிக் காட்டினார்.
இந்தியாவுக்கு கனடா குழு பயணம் மேற்கொண்டு இரு நாடுகளிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று மெக்கலம் குறிப்பிட்டார். இந்திய மாணவர்களைக் கவர்வதில் அவுஸ்திரேலியா அதிக தீவிரம் காட்டி வருகிறது. இதே போல விசா வழங்கும் நடைமுறைகள் தளர்த்தப்பட்டால் இந்திய மாணவர்கள் கனடாவுக்கு வருவது அதிகரிக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நிறுவனங்களுக்கான வரி 18 சதவீதமாகத் தொடர வேண்டும் என்றும் இதன் மூலம் வரி செலுத்துவோர் சேமிக்கும் அளவு 600 கோடி டொலராக உயரும் என்றும் அவர் கூறினார். நிறுவன காப்பீடு பிரிமீயம் முறையில் மாற்றம் செய்தால் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை குறையும் என்று குறிப்பிட்ட ராப் ஒலிபன்ட், 20 ஆண்டுகளுக்கு முன்னரே குஜராத் மாநிலம் மிகச் சிறப்பாக முன்னேறும் என குறிப்பிட்டதாகக் கூறினார்.

No comments:

Post a Comment