Wednesday, 7 December 2011

சந்தேக நபரின் வங்கி அட்டையின் மூலம் பணத்தை திருடிய பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு விசாரணை


போதைப்பொருள் வழக்கொன்றில் கைதான சந்தேக நபரின் வங்கிக் கணக்கிலிருந்து 20,000 ரூபாவை களவாக பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கெதிராக விசாரணை நடத்துமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தில் பணிபுரியும் சார்ஜன்ட் ரணில்  என்பவரே இச்செயலைச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால, இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு கொழும்பு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று(07.12.2011) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரின் வங்கி அட்டையின் கடவு  இலக்கத்தை வற்புறுத்தி பெற்றுக் கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் வங்கியிலிருந்து பணத்தை பெற்றுள்ளதாக  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபராகவுள்ளவரின் மாதாந்த வங்கிக் கணக்கு விபரத்தை அவதானித்த அவரின் மனைவிஇ 20,000 ரூபா மோசடியாக பெறப்பட்டுள்ளதை அறிந்ததாக சந்தேக நபரின் சட்டத்தரணி வசந்த பிட்டிகல நீதிமன்றில் தெரிவித்தார்.
வங்கியின் கண்காணிப்பு கமெராவில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் படம்  பதிவாகியிருந்ததாக தெரிவித்த சட்டத்தரணி அக்கமெராவின் பதிவுகளை அழிக்க வேண்டாம் என வங்கிக்கு உத்தரவிடுமாறும் நீதவானைக் கோரியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் நடப்பது பொலிஸாருக்கு வெட்கக்கேடானது என சுட்டிக்காட்டிய நீதவான் பிரஹர்ஷா ரணசிங்க, இதுகுறித்து விசாரிக்குமாறு  கொழும்பு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment