Sunday, 1 May 2011

விரைவில் தண்ணீர் பற்றாக்குறை நாடாக இந்தியா மாறும் அபாயம்: இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால்



தண்ணீர் பற்றாக்குறை நாடாக இந்தியா மாறும் அபாயம் உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் தெரிவித்தார்.
திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக் கழகமும், குமரி அறிவியல் பேரவையும் இணைந்து இளம் விஞ்ஞானிகளுக்கான "நீரும் வாழ்வும்" என்ற ஒரு நாள் கருத்தரங்கை காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நடத்தியது.
இதில் கலந்துகொண்டு பேசிய மகேந்திரபுரியில் உள்ள இஸ்ரோ அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி இங்கர்சால், உலக அளவில் உள்ள தண்ணீரில் 3 சதவீதம் தான் பயன்படுத்தப்படுகிறது. இதில் 0.26 சதவீதம் மட்டுமே சுத்தமான தண்ணீர் இதை வைத்து தான் விவசாயம், குடிநீர் தேவை, கால்நடைகள், தொழிற்சாலைகள், மின் உற்பத்தி ஆகியவற்றிக்கு பயன்படுத்தி வருகிறோம். இந்த தண்ணீர் மாசு அல்லது பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணமாக மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாதல், பருவநிலை மாற்றம், தண்ணீரை அதிக அளவு பயன்படுத்துவது போன்றவை திகழ்கிறது.
நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சுவதால் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 2025 ம் ஆண்டில் ஆயிரத்து 800 மில்லியன் மக்கள் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அப்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகும். அதிக அளவு வீட்டு உபயோகத்திற்கு தண்ணீரை பயன்படுத்துவது, தொடர்ச்சியாக மணல் அள்ளுவது, வளர்ந்து வரும் தொழிற்சாலை, மின் உற்பத்தி இவைகள் தண்ணீரின் தன்மையை மாற்றி விடுகிறது. இதனால் உயிர் சூழல் பாதிப்படைந்து மனித சுகாதாரம் கேள்விக்குறியாகிறது.
உலக அளவில் தண்ணீர் வளம் உள்ள நாடு இந்தியா தான். ஆனால் மேற்கண்ட தண்ணீர் தேவைகள் மற்றும் முறையற்ற தண்ணீர் பயன்பாட்டால் விரைவில் தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் உள்ளது. இதனை மாற்றுவதற்கு மழை நீர் சேகரிப்பு, சிக்கனமான உபயோகம், தண்ணீரை மறு சுழற்சி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment